Saturday, April 13, 2013

அயல்நாட்டில் என்னை அசரவைத்தவர்கள்...

 நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத நேரம் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.நம் வாழ்க்கை பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள், நிகழும் சம்பவங்கள் அனைத்தும் நம் மனதில் பதிந்து விடுவதில்லை.ஒரு சில மனிதர்கள் மட்டுமே பதிவார்கள்.

அப்படி என்னை அயல்நாட்டில்  அசத்தி, என் மனதில் பதிந்தவர்களைத்  தான் எழுதியிருக்கிறேன்.




1) சரவணபவனில் மெனு கார்டை பார்க்காமலேயே thaali rice, thosa  என்று வேண்டியதைப் பெற்று கையாலேயே சாப்பிடும் வெள்ளையர்கள்.

2) கடைத்தெரு சுற்றி வருகையில் திடீரென வழிமறித்து , நீ இந்தியப் பெண்ணா ??உனக்கு சேலைக் கட்டத் தெரியுமா??எப்படிக் கட்டுவதென்று எனக்குச் சொல்லித் தர முடியுமா ?? என்றுக் கேட்ட வெள்ளைக்காரப்  பெண்கள் கூட்டம்.

3) பிரான்சிலேயே பிறந்து வளர்ந்த குழந்தையாயிற்றே என்று "salut , tu vas bien??" என்றால் "அக்கா நான் நல்லாத்  தமிழ் பேசுவேன்" என்றென்னை செருப்பால் அடித்த என் நண்பரின் குழந்தை.

4)  உள்ளூரில் இருக்கும் பெண்களில் பலரும்   அயல் நாட்டு மோகத்தில் அலைகையில், அயல் நாட்டின் அன்றாட வாழ்வில் ஊறிப்போன பின்னர் கூட உடையில் கவனமாய் இருந்து , இன்னும் கல்லு வச்ச மூக்குத்தியை மாற்றி வளையமாக்காத எம் குலப் பெண்கள்(ஒரு சிலரே).

5) ஐரோப்பிய வெள்ளை அழகிகள் ஆயிரம் இருக்க, அயல் நாட்டிலேயே வளர்ந்தும் தமிழ் பெண்களையே தேடிப்பிடித்து காதலிக்கும் எம் குல ஆண்கள்.(ஒரு சிலரே).

6) உனக்குப்  பரத நாட்டியம் ஆடத் தெரியுமா?? என்று என்னைப் பார்த்துக் கேட்ட என் அலுவலக சக ஊழியர்.இதில் என்ன அசத்திபுட்டாங்கன்னு கேட்கறிங்களா??.அவர் ஒரு ஆப்பிரிக்கர்.தென் ஆப்பிரிக்காவின் மிகவும்  பின் தங்கிய குக்கிராமத்திலிருந்து வந்தவர்.சென்னையை பற்றியும் தமிழ் நாட்டைப் பற்றியும் தமிழ்கலாச்சாரத்தைப் பற்றியும் கேள்வி கேட்டே என்னைக் கொல்லுபவர்.

7) 18 வயதானால் போதும் பெற்றோரைப் பிரிந்துப்  பிள்ளைகள் தனியே வாழலாம் எனும் கலாச்சாரத்திலும் பிள்ளைகளை கைக்குள்ளேயே வைத்து வளர்த்து எங்கே செல்கிறாய்?? யாருடன் செல்கிறாய்?? என்று கேள்வி  கேட்கும்  பெற்றோர்கள்.(பிள்ளைகளை இந்திய முறைப்படி வளர்க்கும் பெற்றோர்களும் ஒரு சிலரே )


8) ஐரோப்பாவின் தட்பவெப்ப சூழலிலும்  வாழ்கை முறையிலும்  நன்றாக பழகிவிட்டாலும் "சொர்க்கமே கண்ணுல காமிச்சாலும் என் சொந்த ஊரப் போல வராது "என்று ஆண்டுக்கொரு முறை ஊரை எட்டிப் பார்த்திட ஏங்கும் உள்ளங்கள்.


9) ஆங்கில வார்த்தைக் கலக்காமல் தமிழில் ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் பேசினால் பரிசு எனும் போட்டி நடத்தும் நிலைமை உள்ளூரில் இருக்க, தமிழை பள்ளியில் கற்க வாய்பில்லாத போதும், தனியே தமிழ் பயின்று இசை முதல் கவிதை போட்டி வரை கலக்கும் மாணவர்கள்.

10) இவைகளையெல்லாம் தாண்டி பாரீஸ் நகரத்தில், நகரின் முக்கியப் பகுதியில் இயங்கும் தமிழ் கடைகளில் பெரிய தமிழ் எழுத்துக்களில்  பெயர் பலகை வைத்திருக்கும் வணிகர்கள்.வரிச்சலுகை வேண்டுமானாலும் தருகிறோம் தமிழில் பெயர் பலகை வையுங்கள் என்று எவரையும் கெஞ்ச வேண்டிய நிலைமை இல்லை.


இதில் இருந்து என்னத் தெரிகிறது என்றால், நாம் யார்? என்று நம்மில் பலருக்குத் தெரியாவிட்டாலும் நம்மவர் இல்லாத பலருக்குத் தெரிந்திருக்கிறது.


அன்புடன்,
ஆதிரா.









12 comments:

  1. நல்ல தொகுப்பு.உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன்

    ReplyDelete
  2. ஒவ்வொன்றும் அசத்தலான வரிதான்...அதிலும் பத்தாம் வரி மிக மிக அருமை!

    ReplyDelete
    Replies
    1. பிடித்த வரியை சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி கிரேஸ்

      Delete
  3. தெரிந்து கொண்டேன் அதுவும் 9-வதாக சொன்ன விஷயம் என் மனதை நிறைத்தது
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. அருமை! இங்கிருக்கும் தமிழர்கலை வெட்கப் படவைத்துவிட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்.....ஆனால் என் நோக்கம் அதுவல்ல..உள்நாட்டில் நம் கலாச்சாரம் மெல்ல அழிந்து வரும் தருணத்திலும் கடல் தாண்டி வாழ்கிறது என்று சொல்வதே..

      Delete
  5. இன்று காலை என் நண்பரின் மகள், இங்கு பிறந்து வளர்ந்து பிரஞ்சை முதல் மொழியாகக் கற்றவள், தமிழை பேசத் தெரிந்தவள், "இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்- மாமா " , அட்சர சுத்தமாக மாகக் கூற, என்ன? இவ்வளவு அழகாக உச்சரிக்கிறாயே, நம்ம தமிழ் தொலைக்காட்சித் தொகுப்பாளினிகள் , உன்னிடம் படிக்ககலாம் எனக் கூறினேன்.
    சமீபத்தில் பாரிஸ் தமிழர் கல்வி நிலைய மாணவர்களின் பேச்சுப் போட்டியை பார்த்தேன். மிக அழகாகப் பேசினார்கள். பெரும்பகுதி இங்கே பிறந்து, பிரஞ்சை முதல் மொழியாக பாடசாலையில் கற்போர். தமிழை வாரவிருதியில் கற்போர்.
    பல இங்கே நீங்கள் கண்டவை என்னையும் ஆச்சரியப்படுத்தின, மகிழ்வாக உள்ளது. இங்கு வாழ்வதால் எங்களுக்கு எம் மொழியின் அருமை பெருமை புரிகிறது.
    அத்துடன் பிரஞ்சியர்கள் தூய பிரஞ்சில் பேசுபவர்கள், மொழிப்பற்று மிக்கவர்களாக எனக்குத் தெரிகிறார்கள்.
    உலகில் தமிழர்களாகிய நாமே தாய்மொழிப் பற்றுக் குறைந்தோர்- எனக் கருதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம்.உண்மை தான்..நமது தொலைக்காட்சி தொகுப்பாளர்களெல்லாம் நம் பிஞ்சுகளிடம் கொஞ்சுத் தமிழ் பயில வேண்டும்.

      Delete
  6. "சொர்க்கமே கண்ணுல காமிச்சாலும் என் சொந்த ஊரப் போல வராது "என்று ஆண்டுக்கொரு முறை ஊரை எட்டிப் பார்த்திட ஏங்கும் உள்ளங்கள்!!!!!!!!!!!!

    நச்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  7. அருமை, அருமை


    அன்புடன்,
    பனிமலர்

    ReplyDelete