Saturday, March 9, 2013

தோழிகளே வாருங்கள்..இவற்றில் எதையேனும் நீங்கள் செய்ததுண்டா என்று கூறுங்கள் ???


 வீட்டில் கிடைக்கும் உடைந்த பொருட்களை எல்லாம் தேடி சொப்பு சாமான் சேர்த்ததுண்டா??

குழம்பு வைக்க மிளகாய்த்தூள் வேண்டுமென செங்கல்லை விரல் தேயத் தேய்த்து செங்காமட்டை அரைத்ததுண்டா??

மண்ணில் கேக் செய்து தோழி பிறந்தநாளை கொண்டடியதுண்டா??

வளையல் ஜோடி சேர்க்கும் விளையாட்டிற்காக உடையாத வளையலையும் உடைத்து வளையல் துண்டுகள் சேர்த்ததுண்டா??

திருவிழாக் கடையில் பலூனுக்காகவும் பஞ்சுமிட்டாய்க்காகவும்  அடம் பிடித்ததுண்டா??

சில்லுக் கோடு ,செதுக்கு,நொண்டி, நாடு பிடித்தல், போன்ற விளையாட்டுக்களை குதித்து குதித்து ஆடுகையில் என் கொலுசு சத்தம் போட வேண்டும், இப்பவே கொலுசு போட்டு விடுடி னு அம்மாவை படுத்தியதுண்டா??

நாம் ஆடிய விளையாட்டெல்லாம் போதாதென பசங்க விளையாடும் பச்சை குதிரை, கில்லி,கிர்க்கெட் பக்கம் சென்று "டேய் என்னையும் சேத்துக்குங்க டானு " கேட்டு அவமானபட்டதுண்டா??

நிலவு வந்த நேரத்தில் அப்பாவின்  வரவிற்காக காத்திருந்த அம்மாவின் சேலையில் ஒளிந்து கொண்டு  அப்பாவின் கைகளையே பார்த்ததுண்டா ??

அம்மாவின் நெற்றிமேல் இருக்கும் பொட்டை பார்த்து நீ மட்டும் அங்க வச்சிருக்க எனக்கு மட்டும் ஒரு பொட்டு தானா ? என்று வினவியதுண்டா??

கொடியில் காயும் துண்டை எடுத்து தாவணிப் போட்டு கண்ணாடி முன் நின்றதுண்டா ??

அம்மாவிடம் தலை வாருகையில் அடிக்கடி தலையைத் திருப்பி கொட்டு வாங்கியதுண்டா ??

மழைக் காலத்தில் சிவனேன்னு செடியில் அமர்ந்திருந்த தட்டான (தும்பி) புடிச்சி ஏதோ ஓடி ஓடி பாட்டாம் பூச்சிய புடிச்ச மாறி "ஏய் புடிச்சுடண்டி புடிச்சுடண்டி னு " கத்தியதுண்டா ??

பத்து பைசா அம்மாட்ட வாங்கி பெட்டிக் கடையைத் தேடி தேன் மிட்டாய் தேங்காய் மிட்டாய் குடல் வத்தல் என ருசித்ததுண்டா??

பள்ளிக் கூட வாசலில் இலந்த வத்தல் ,மாங்காய் என வாங்கி நொறுக்கி கொண்டே வீடு போய் சேர்ந்ததுண்டா ??

பள்ளி முடிந்ததும் விளையாடிவிட்டு கால தாமதமாய் வீடு செல்ல , உங்க அம்மா உங்களை வெளுத்து வாங்கியதுண்டா??

அக்காவ பாரு அவ எப்படி இருக்கா, நீயும் தான் இருக்கியேன்னு அட்வைஸ் வாங்கியதுண்டா??

டிக் டிக் யாரது ? தேவதை?என்ன வேண்டும்? கலர் வேண்டும் என்ன கலர் ??

பூ பறிக்க வருகிறோம்..பூ பறிக்க வருகிறோம் எந்த பூவை பறிக்கனும் எந்த பூவை பறிக்கனும்?

ஒரு குடம் தண்ணி ஊத்த ஒரு பூ பூத்துச்சாம்.இரண்டு குடம் தண்ணி ஊத்த இரண்டு பூ பூத்துச்சாம்..

இந்த பாட்டுகளை பாடி விளையாடியதுண்டா??

கல்லூரி படிக்கும் அண்ணாவையோ அக்காவையோ பாத்தா "நீங்க பதிமூனாவது தான படிக்கிறிங்கனு கேட்டதுண்டா??

ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய்னு குட்டி சைக்கிள் வாடகைக்கு எடுத்து நீங்களே சைக்கிள் பழகியதுண்டா??

காயம் படாம சைக்கிள் கத்துக்க முடியாதுன்னு சொன்னவன் கிட்ட "அதெல்லாம் நாங்க கத்துபோம்னு " சவுண்ட் விட்டு அடுத்த நாளே விழுந்து வாரியதுண்டா??

கருப்பு வெள்ளை தொலைக் காட்சியை வெறிக்க பாத்து "இதுல எப்படி மனுசங்க தெரியறாங்க,ஒருவேல  பெட்டிய உடைச்சு பாத்தா உள்ள இருப்பாங்களோன்னு "விஞ்ஞானி போல் யோசித்ததுண்டா??

காலையில் எழும்பையில் ரேடியோவின் கோபால் பல்பொடி விளம்பரத்துடன் எழுந்ததுண்டா??

அப்பாவின் சட்டை போட்டு பார்த்ததுண்டா??

ஒரே ஒரு மஞ்சைப் பையில் உங்கள் பள்ளிக் கூட புத்தகங்கள் அடங்கியதுண்டா ??

சாமி கும்பிடு னு அம்மா சொன்னா  கண்ண மூடர மாறி மூடிட்டு ஒத்த கண்ண தொறந்து எல்லாரும் என்னா பண்றாங்கன்னு நோட்டம் விட்டதுண்டா??

ஞாயிற்று கிழமை மட்டுமே கிடைக்கும் கறி சோற்றிற்காக காத்திருந்ததுண்டா??

அம்மாவின் பெரம்படியில் இருந்து தப்பிக்க சுற்றலான பாவாடை அணிந்து,விழாத அடிக்கு விழுந்தது போல் நடித்ததுண்டா ??

வானூர்திக்கு  (flight ) டாட்டா காட்டி அதை பறவை போல் ரசித்ததுண்டா ??
.
.
.
.
.
.
.

நினைவுகள் நெஞ்சைக் கிள்ளி இன்னும் எழுதடி எழுதடி என்கிறது.தங்கள் நேரத்தை கணக்கில் கொண்டு நிறுத்திக் கொள்கிறேன்.

கடைசியாய் ஒன்று..

பூப்படைந்த ஒரே நாளில் உங்கள் உலகம் பூட்டப் பட்டு வீட்டு திண்ணையில் அமர்ந்து(அதற்கு மேல் செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருக்கும்)  வெறும் பல்லாங்குழியும், கல்லாங்காயும் தாயமும் மட்டும் ஆடியதுண்டா?? 

இவற்றில் ஏதேனும் சிலவற்றை செய்திருந்தால் நீங்கள் 80க்கு முன்னே பிறந்திருக்க வேண்டும்.

இவை அனைத்தையும் செய்திருந்தால் நீங்கள் 80களில் பிறந்திருக்க வேண்டும் 

இவற்றில் எதையுமே செய்யவில்லையெனில் நீங்கள் 90க்கு பின் பிறந்திருக்க வேண்டும்.




18 comments:


  1. வணக்கம்!

    வண்ண வண்ண மத்தாப்பாய்
    வடித்த வரிகள் மிளிர்ந்தனவே!
    எண்ண எண்ண இதயத்துள்
    இனிமை பொங்கி வழிந்ததுவே!
    உண்ண உண்ணத் தெவிட்டாத
    உன்றன் தமிழில் நான்முழுகிக்
    கொண்ட இன்பம் வளா்கிறது!
    கும்மி கொட்டிக் களிக்கிறது!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  2. சிறுவயது பருவத்தை நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. அழகான அவதானிப்பு ..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. மீண்டும் அந்த வயதுக்கே அழைத்து சென்றீர்கள் நன்றிங்க. கொட்டு வாங்கியது மறக்க முடியுமா ?

    ReplyDelete
  5. அழகிய படைப்பு.
    வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  6. ந்ல்ல கேள்விகள் அந்த நாள் ஞாபகமோ! அருமை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஐயா..

      Delete
  7. ஹ..ஹ..ஹ..ஹ..ஹா.

    மிகவும் அருமையான பதிவு தோழி. இதில் சிலவற்றை நான் அனுபவித்ததுண்டு.

    மீதி விடுபட்டதை அடுத்த பதிவில் எழுதிவிடுங்கள். சுவாரஸ்யமாய் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோதரி

      Delete
  8. ஆஹா மலரும் நினைவுகளை அழகாகத் தட்டி எழுப்பி விட்டீர்கள், இனிமேல் எங்கு நான் என் கவிதையை தொடர்வது? :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி கிரேஸ்..

      Delete
  9. அழகாக அந்த நாள் ஞாபகங்களை ஞாபகப்படுத்தி,அவ்வாழ்க்கை திரும்ப வராதா என ஏங்க செய்துவிட்டீர்கள் ஆதிரா. அந்த அழகிய (கனாக்) காலப்பகிர்வுக்கு நன்றிகள். உங்க ஞாபகசக்திக்கு சபாஷ்.(சிலது நானே மறந்துவிட்டேன்)

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கையில் எதுவே இல்லாத போதும் சந்தோசம் நிறைந்திருந்த நாட்கள் அவை..அதனால் மறக்கவில்லை..

      Delete